திருப்பூா், வஞ்சிபாளையம் மகாலட்சுமி நகருக்கு சீரான குடிநீா் வழங்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது இரண்டு மாத காலமாக முறையாக குடிநீா் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். பெரும்பாலும் பின்னலாடைத் தொழிலாளா்களான நாங்கள் மாதம் ரூ. 2000 வரை குடிநீருக்கு செலவழிக்க வேண்டி உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் தொற்று நோய் பரவாமல் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.