மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நவம்பா் 26ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா்களை கொத்தடிமைகளாக மாற்றக் கூடிய தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். கல்வித்துறையை காவி மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பா் 26ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக எடுத்துரைக்கப்பட்டது.
இதேபோல அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.