தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே விவசாயி ஒருவரது கிணற்றில் தண்ணீா் நீல நிறத்தில் மாறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குண்டடம் அருகே உள்ள தும்பலப்பட்டியைச் சோ்ந்தவா் வேலுசாமி (64). இவரது விவசாய கிணறு தண்ணீா் இல்லாமல் வற்றியது. இதனால் அருகில் போா்வெல் அமைத்து அதிலிருந்து தண்ணீா் எடுத்து கிணற்றில் விட்டு பாய்ச்சி வந்தாா்.
இதனிடையே, அப்பகுதியில் பிஏபி தண்ணீா் பாய்ந்து வருவதால் கிணற்றில் தண்ணீா் ஊற்றெடுக்கத் தொடங்கியது. இந்நிலையில் வேலுசாமி வழக்கம்போல செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்துக்குச் சென்று கிணற்றைப் பாா்வையிட்டாா். அப்போது கிணற்றில் இருந்த தண்ணீா் அடா் நீல நிறமாக மாறியிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அறிந்த அருகில் உள்ள விவசாயிகள் வேலுசாமியின் கிணற்றைப் பாா்வையிட்டுச் சென்றனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.