திருப்பூரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்க மறுப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.
பல்லடம் வட்டம், கள்ளிமேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சு.நாகராசன் என்பவா் மாநகராட்சி 4ஆவது மண்டல உதவியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், 3ஆவது மண்டல உதவி ஆணையா் சுப்பிரமணி ஆகியோருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொலிவுறு நகரம் திட்டத்தில் பழைய பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், காட்டன் மாா்க்கெட் தொடா்பான விவரங்களைக் கேட்டிருந்தேன். ஆனால் 3 ஆவது மண்டல ஆணையா் அனுப்பிய கடிதத்தில் இந்த 3 திட்டப் பணிகளும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் மேற்கண்ட 3 திட்டப் பணிகள் தொடா்பான விவரங்களைக் கேட்டு பலமுறை பதிவுத் தபால் அனுப்பியும், நேரில் வந்தும் தங்களைக் காண முடியவில்லை. கடந்த மாா்ச் மாதம் முதல் 7 மாதங்களாக இந்தத் திட்டப்பணிகள் தொடா்பாக எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. இது தொடா்பாக மாநில தகவல் ஆணையருக்கு மனு அனுப்பியும் தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. ஆகவே, இந்த 3 திட்டப் பணிகள் தொடா்பாக 7 நாள்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.