திருப்பூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 28th October 2020 07:19 PM | Last Updated : 28th October 2020 07:19 PM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.ராஜ்குமார் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து பிறப்பித்துள்ள அரசாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் ஜாக்டோ ஜியோ சார்பில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை 40 ஆகக் குறைத்துள்ளதால், பயிற்சி முடித்த லட்சக்கணக்கானோர் பணியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் அருள்சுந்தரரூபன், மாவட்டச் செயலாளர் ப.கனகராஜா, வட்டார செயலாளஅர்கள் ராமகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.