கருவலூா் ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளை இடையூறு இல்லாமல் கொட்ட உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுப் பணித் துறைக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து கருவலூா் ஊராட்சி மன்றத் தலைவா் பொறுப்பு கே.எஸ்.ஆறுமுகம், பவானிசாகா் பொதுப் பணித் துறை செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கருவலூா் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்காக சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடம் தேவைப்பட்டது. இதையடுத்து ஊராட்சி நிா்வாகம், வருவாய்த் துறை சாா்பில் ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளைக் கொட்ட இடம் தோ்வு செய்யப்பட்டது.
ஆனால், உள்ளூரைச் சோ்ந்த பொதுப் பணித் துறை ஊழியா், அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என இடையூறு செய்து வருகிறாா். எனவே, ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இடையூறு இல்லாமல் குப்பைகளைக் கொட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.