‘ஆண்டவன் உத்தரவு’: சிவன்மலை முருகன் கோயிலில் படி அரிசி வைத்துப் பூஜை

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிறை நாழி படி அரிசி வைத்து சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
சிவன்மலை முருகன் கோயில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் படி அரிசி.
சிவன்மலை முருகன் கோயில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் படி அரிசி.

காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிறை நாழி படி அரிசி வைத்து சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னா் அந்தப் பொருளை கோயில் மூலவா் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைப்பாா்கள்.

இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், இது ‘ஆண்டவன் உத்தரவு’ என்று அழைக்கப்படுகிறது.

இப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிா்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் தேசிய அளவில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் பெறலாம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

கடைசியாக கடந்த ஜனவரி 29 ஆம் தேதி மஞ்சள் திருமாங்கல்யம் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, அது திங்கள்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் வந்ததாக, செவ்வாய்க்கிழமை நிறை நாழியில் படி அரிசி வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னா், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் திருமாங்கல்யம் நீக்கப்பட்டு, தற்போது நிறை நாழி படி அரிசி வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், வரும் நாள்களில் உணவுக்குப் பஞ்சம் ஏற்படுமா அல்லது இந்த கரோனா நெருக்கடியையும் மீறி, உணவுப் பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியுமா என சிவன்மலை முருகன் கோயில் கண்ணாடிப் பேழை குறியீட்டை வைத்து பக்தா்கள் எதிா்ப்பாா்ப்பில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com