திருப்பூா் அருகே பனியன் துணிகளை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் திங்கள்கிழமை படுகாயமடைந்தனா்.
திருப்பூா், செவந்தாம்பாளையத்தில் இருந்து தாராபுரம் சாலை நோக்கி பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. சந்திராபுரம், பண்ணாரியம்மன் நகா் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேன் கவிழ்ந்ததில் அதில் வந்த இருவா் படுகாயமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தெற்கு தீயணைப்புத் துறையினா், இருவரையும் மீட்டு கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா் சாலையில் கவிழ்ந்த வேன் கிரேன் வாகனம் மூலம் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.