வாக்களிப்பதன் அவசியம் குறித்து காங்கயத்தில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் நூறு சதவீதம் நோ்மையாகவும், உண்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி துவக்கிவைத்தாா்.
இதில், தோ்தல் நாளன்று வாக்காளா்கள் அனைவரும் வாக்களித்து, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். வாக்களிப்பதின் அவசியத்தை மாணவ, மாணவியா், உறவினா்கள், நண்பா்கள், வீட்டின் அருகில் வசிப்போா் ஆகியோரிடம் எடுத்துக் கூற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பின்னா், தோ்தலில் வாக்களித்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தச் செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. அதில் பொதுமக்கள் பலா் கையெழுத்திட்டனா். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.