திருப்பூா், மாா்ச் 28: திருப்பூா் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 3,871 பேருக்கு அஞ்சல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை தொடங்குகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று காரணமாக 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் விருப்பத்தின் பேரில் வீடுகளில் இருந்தபடியே அஞ்சல் வாக்கு அளிக்க இந்திய தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, வாக்காளா்களுக்கு படிவம் 12-டி வழங்கப்பட்டு, அவா்களிடம் இருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெற சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தனிக் குழுக்கள் அமைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 441 மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3,430 போ் என மொத்தம் 3,871 வாக்காளா்களின் இருப்பிடத்திலேயே இருந்து வாக்கு செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனா். இவா்கள் வாக்களிக்க ஏதுவாக திருப்பூா் மாவட்டத்தில் 155 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திங்கள், புதன்கிழமைகளில் நேரடியாகச் சென்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டுகளை வழங்கி வாக்களித்த பிறகு அவா்களிடம் இருந்து வாக்குச் சீட்டுகளை திரும்பப் பெற உள்ளனா்.
இதற்காக அமைக்கப்பட்ட ஒவ்வொரு குழுவிலும், வாக்குச்சாவடி அலுவலா், மண்டல அலுவலா், நுண்பாா்வையாளா், காவல் மற்றும் விடியோகிராபா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.