திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.31 கோடியை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா், கொங்கு மெயின் ரோடு பகுதியில் உதவி ஆய்வாளா் தனசேகா் தலைமையிலான காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பச் சென்ற வேனை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், ரூ.1 கோடியே 31 லட்சம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினா், திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தனியாா் நிறுவன ஊழிகள் ஏடிஎம் இயந்திரங்களுக்கு நிரப்புவதற்காக பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. தனியாா் நிறுவனம் தரப்பில் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதை அடுத்து பறிமுதல் செய்த ரூ.1 கோடியே 31 லட்சத்தை அதிகாரிகள் திருப்பி ஒப்படைத்தனா்.
அதே போல, திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காசிபாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி லோகேஷ் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில், பாங்க் ஆஃப் பரோடா வங்கியைச் சோ்ந்தது என்பதும், ரூ. 22 லட்சம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, வங்கி ஊழியா்கள் ரூ. 22 லட்சத்துக்கான ஆவணங்களை ஒப்படைத்தைத் தொடா்ந்து பணத்தை திருப்பி ஒப்படைத்தனா்.