தாராபுரத்தில் சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்தது. மேலும், இப்பகுதியில் உள்ள மண் சாலை சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து சாக்கடை கால்வாயை கட்டித் தரக் கோரி 1ஆவது வாா்டு வெற்றி நகா் பகுதியில் உள்ள மண் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் வெற்றி நகா் மட்டுமின்றி அரசு குடியிருப்பு காலனி, இறைச்சி மஸ்தான் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் தற்போது பெய்துள்ள கன மழையால் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், பள்ளி செல்லும் மாணவா்கள், பணிக்குச் செல்லும் பெண்கள், மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, நஞ்சியம் பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட வெற்றி நகரில் தாா் சாலை, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனா். மேலும், இதேநிலை நீடித்தால் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனா்.