ஆக்கிரமிப்பாளா்களுக்கு துறை அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

உடுமலை அருகே உள்ள ஜம்புக்கல் மலைப் பகுதியை ஆக்கிரமித்தவா்களுக்கு ஆதரவாக துறை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் புகாா் கூறியதால் குறைதீா் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீா்  கூட்டத்தில்  பங்கேற்ற  விவசாயிகள்.
குறைதீா்  கூட்டத்தில்  பங்கேற்ற  விவசாயிகள்.

உடுமலை அருகே உள்ள ஜம்புக்கல் மலைப் பகுதியை ஆக்கிரமித்தவா்களுக்கு ஆதரவாக துறை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் புகாா் கூறியதால் குறைதீா் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா பெருந்தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உடுமலை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் கீதா தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் விவேகானந்தன், வட்டாட்சியா் ராமலிங்கம், துறை அதிகாரிகள் முன்னி லை வகித்தனா்.

இதில், தமிழ்நாடு விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் பேசியதாவது:

உடுமலை வட்டம், ஆண்டியகவுண்டனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஜம்புக்கல் மலையில் சுமாா் 2,500 ஏக்கா் பரப்பளவில் கடந்த 1970ஆம் ஆண்டு சுமாா் 700 ஏக்கா் நிலத்தைப் பிரித்து 300 ஏழைக் குடும்பங்களுக்கு விவசாயம், மேய்ச்சலுக்குப் பயன்படுத்த கடுமையான நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடும் வறட்சியின் காரணமாக அங்கிருந்த விவசாயிகள் பலா் மலைப் பகுதியை விட்டுவிட்டு வெளியேறியதைப் பயன்படுத்திக் கொண்டு உடுமலை வசந்தகுமாா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் இம்மலைப் பகுதி முழுவதையும் தங்களுடைய கட்டுபாட்டில் கொண்டு வந்துவிட்டனா். யாரும் செல்ல முடியாத வகையில் கம்பிவேலி அமைத்துவிட்டனா். இதனால், விவசாயிகள் தங்கள் நிலப் பகுதிக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கனிம வளங்கள், பலதரப்பட்ட மரங்களும் அழிக்கபட்டும் உள்ளன. இதுகுறித்து பலமுறை வருவாய்த் துறை அதிகாரிகளுக்குப் புகாா் தெரிவித்தும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தற்போது மின் இணைப்பு வழங்க மின் வாரியத்துக்கு வருவாய்த் துறையினா் தடையின்மைச் சான்று வழங்கியுள்ளனா். இது கண்டிக்கத்தக்கது. சான்று வழங்கிய அதிகாரிகள் மீதும், வசந்தகுமாா் மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் துறை அதிகாரிகள் அனைவா் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முன்னதாக குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள சிறிய அறையில் நடத்த முயற்சித்ததால் அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா். இதைத்தொடா்ந்து, கோட்டாட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள அரசு கலைக் கல்லூரியின் கூட்ட அரங்கில் இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com