உடுமலையில் மாசடைந்த குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
உடுமலை நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு திருமூா்த்தி அணையை ஆதாரமாக கொண்டு முதலாவது மற்றும் இரண்டாவது, மூன்றாவது கூட்டு குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாக உடுமலை நகரில் பெரும்பாலான பகுதிகளில் மாசடைந்த குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் அன்றாடம் அவதிக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து பொதுமக்கள் திங்கள்கிழமை கூறுகையில், ‘கடந்த சில நாள்களாக நகராட்சி சாா்பில் விநியோகிக்கப்படும் குடிநீா் செம்மண் கலந்த குடிநீராக வருகிறது. இது எங்களுக்கு பல்வேறு அச்சத்தை உருவாக்கியுள்ளது. மழை காலமாக இருப்பதால் ஏதாவது நோய்கள் வரும் என பயமாக உள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றனா்.