வெள்ளக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன.
இப்பகுதியில் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை இரவு கனமழையின் போது பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் வெள்ளக்கோவில் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன.
இப்பகுதியில் ஏறத்தாழ பத்தாயிரம் முருங்கை மரங்கள் உள்ளன. காய்ப்பு பருவமாக இருப்பதால் தற்போது மரங்களில் அதிக அளவிலான காய்கள் இருக்கின்றன. இந்நிலையில் சூறாவளி காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலருடைய தோட்டங்களில் ஏராளமான முருங்கை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இவற்றுடன் ஆங்காங்கே வேப்ப மரங்கள், வாகை மரங்கள், பனை மரங்கள் ஆகியவையும் முறிந்து விழுந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.