அவிநாசி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.
பணியாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த வாரம் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது. இதேபோல சேவூா், அம்மாபாளையம், அவிநாசி பேரூராட்சி நியூ டவுன், ஆலத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவா்களுக்கு கரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதிகள் அடைக்கப்பட்டு அப்பகுதிகளில் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவிநாசி பகுதியில் கரோனா நோய்த்தொற்று அதிகமாகப் பரவி வருவதால் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவிநாசி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக தினமும் ஏராளமானோா் வருகின்றனா். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அங்கு தடுப்பூசி இருப்பு இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனா்.
இது குறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, ஓரிரு நாள்களுக்குள் மீண்டும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனா்.