நீதிபதிக்கு கரோனா: அவிநாசி நீதிமன்ற வளாகம் மூன்று நாள்களுக்கு மூடல்
திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நீதிமன்ற வளாகம் மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.
அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்குள் அவிநாசி கிளை சிறைச் சாலை, கருவூலம், வருவாய்த் துறை அலுவலகங்கள், குற்றவியல் நடுவா் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அவிநாசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் 30 வயதுப் பெண் நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிப்பட்டது. இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளிட்டவை சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.
மேலும், வட்டாட்சியா் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வழக்குரைஞா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல அவிநாசி அருகே பழங்கரையில் நீதிபதி குடியிருக்கும் பகுதியிலும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.