தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே ஆபத்தான நிலையில் சாலையோரம் உள்ள கிணற்றுக்குத் தடுப்பு அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குண்டடத்தை அடுத்துள்ள மேட்டுக்கடையில் இருந்து ஜல்லிபட்டி செல்லும் பிரதான சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் தும்பலப்பட்டிக்கும், காணிக்கம்பட்டி பிரிவுக்கும் இடையில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணறு சாலையோரத்தில் உள்ளது.
இந்தப் பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் வாகன ஓட்டிகள் இந்த இடத்தைக் கடக்கும்போது, ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனா். ஆகவே, ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக சாலையோரத்தில் உள்ள கிணற்றுக்குத் தடுப்பு அல்லது தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.