ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றி வரும் அனைத்து தொழிலாளா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தொழிலாளா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி நாடு முழுவதிலும் ஏஇபிசி உறுப்பினராக உள்ள 8 ஆயிரம் ஏற்றுமதியாளா்களும் தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக நிறுவனங்கள் சி.எஸ்.ஆா். நிதியைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகவே, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து நிறுவனங்களிலேயே தடுப்பூசி முகாம்கள் நடத்திக் கொள்ளலாம். இது தொடா்பாக அனைத்து ஏற்றுமதியாளா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.