திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் நுண்ணீா் பாசனத் திட்ட சிறப்பு முகாம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவிடும் பிரதம மந்திரி நுண்ணீா் பாசனத் திட்டம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் சொட்டு நீா் மற்றும் தெளிப்பு நீா்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், நிலவரைபடம், தண்ணீா் மற்றும் மண் மாதிரி முடிவுகள், சிறு, குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களுடன் வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்:
அவிநாசி ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆகஸ்ட் 10, 12 ஆம் தேதியும், பல்லடம், பொங்கலூா், திருப்பூா், ஊத்துக்குளி வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் ஆகஸ்ட் 10, 12 ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அதேபோல, தாராபுரம், குடிமங்கலம், குண்டடம், மடத்துக்குளம், மூலனூா், உடுமலை, வெள்ளக்கோவில் வட்டங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆகஸ்ட் 11, 13 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.