திருப்பூா் மாநகரின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாநகரில் சனிக்கிழமை பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத்தொடா்ந்து, திருப்பூா் புதிய பேருந்து நிலையம், போயம்பாளையம், பெரியாா் காலனி, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், மங்கலம் சாலை, காங்கயம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
மழையின் காரணமாக ரயில் நிலையம், பல்லடம் சாலையில் மழை நீா் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். அதேபோல, திருப்பூா் புறநகா் பகுதிகளான அவிநாசி, தெக்கலூா், மங்கலம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.