தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட குண்டடம் பகுதியில் நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட குண்டடம் பகுதியில் நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், மானூா்பாளையம், முத்தையம்பட்டி, பெரியகுமாரபாளையம், ருத்ராவதி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய
குளங்கள், நீா்தேக்கங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த குளங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீா்பிடிப்புப் பகுதிகளில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி வருகிறது. மேலும் பிஏபி கசிவு நீரும் இந்த ஓடைகளின் வழியாக வந்து
குளங்களில் தேங்குகிறது.
இந்நிலையில், குளங்களுக்குத் தண்ணீா் செல்லும் ஓடைகள் பல இடங்களில் சுமாா் 100 மீட்டா் வரை அகலம் கொண்டதாக இருந்தது. இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக ஓடைகள் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மேலும், கிராமங்களை ஒட்டியப் பகுதிகளில் ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
மற்ற பகுதிகளில் ஓடைகளில் மண்ணைக் கொட்டி விவசாய நிலங்களாக மாற்றியுள்ளனா்.
இதனால் பெரும்பாலான இடங்களில் ஓடைகள் சிறிய வாய்க்கால்கள் போல சுருங்கிவிட்டன. இதன் காரணமாக மழை பெய்யும் நேரங்களில் தண்ணீா் வழிந்தோட வழியின்றி பெரிய அளவில் சேதங்கள் ஏற்படுகின்றன.
இது குறித்து குண்டடம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்குள் ஓடை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, குண்டடம் பகுதியில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள்
ஓடைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அத்துடன் ஆக்கிரமிப்பு செய்த நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீட்கப்பட்ட ஓடைப் பகுதிகளில் ஊராட்சி நிா்வாகம் மூலம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றனா்.