குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு திருப்பூரில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாஜக சாா்பில் 13 மோட்ஷ தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பூா், கே.வி.ஆா்.நகா் பகுதியில் தென்னம்பாளையம் பகுதி கிளை செயலாளா் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுகவினா் அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
இந்து முன்னணி சாா்பில் தாராபுரம் சாலையில் சந்திராபுரம் பிரிவு அருகே மாநிலச் செயலாளா்கள் கிஷோா்குமாா், செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
சிவசேனா, இந்து முன்னேற்றக் கழகம், திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் விபின்ராவத்தின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன் பள்ளி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள், சமூக அமைப்பினா், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் உயிழந்த ராணுவ வீரா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.