திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 11, 12 ஆவது வாா்டு பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து, பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பாஜகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம், பாஜகவினா் வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
1ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 11, 12 ஆவது வாா்டு சிவசக்தி நகா் முதல் சிறுபூலுவபட்டி வரை உள்ள சாலை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்டது.
இந்த சாலை பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்டு, சரிவர மூடப்படாமல் குண்டும்குழியுமாக உள்ளது.
இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா். மேலும், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பேருந்துகளை இயக்க முடியாதென்று போக்குவரத்து கிளை மேலாளா்கள் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, சாலைகளை உடனடியாக சீரமைத்து, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.