உடுமலை நகராட்சிக்கு சொந்தமான பிளாஸ்டிக் சேகரிப்பு கிடங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
உடுமலை நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் பொது மக்களிடம் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தனித் தனியாக பெறப்படுகின்றன. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி உரக் கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்படுகிறது.
நகராட்சி உரக் கிடங்கில் உள்ள பழைய குப்பைக் கழிவுகள் பயோமைனிங் முறையில் அப்புறபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அகற்றப்படும் கழிவுகளில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுபோக மக்காத குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு பயன்படும் எரிபொருளாக மாற்றும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ராஜேந்திரா சாலையில் உள்ள வாரச் சந்தை வளாக்தில் இரண்டு யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ப்ளாஸ்டிக் சேகரிப்பு கிடங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீப் பிடி த்து எரியத் தொடங்கியது. தகவல் கிடைத்ததும் உடுமலை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இது குறித்து உடுமலை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.