காங்கயம்: காங்கயம் அருகே, அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தேர்வான 1147 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு கலை-அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயம் அருகே, ஈரோடு சாலையில், முள்ளிப்புரம் பகுதியில் உள்ள காங்கயம் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார்.
இந்த முகாமில், 96 வேலையளிக்கும், நிறுவனங்களும், 2165 வேலை நாடுவோரும் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட1,147 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 300 நபர்களுக்கு வங்கிக் கடன் தொடர்பான ஆலோசனைகளும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகத்தின் மூலமாக 450 நபர்களுக்கு திறன் பயிற்சிகளுக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கோவை ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலைய உதவி இயக்குநர் சி.சுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரே.சுரேஷ், காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் ஆர்.ஜெயக்குமார், காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் ப.கொமாரசாமி மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.