ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த 6 பேர் பொங்கல் பரிசுத்தொகையான ரூ.15 ஆயிரத்தை மாவட்ட நி்ர்வாகத்திடம் திங்கள்கிழமை வழங்க முயன்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் மு.ஈசன், மாநிலத் தலைவர் தண்முகசுந்தரம்,அமைப்புச்செயலாளர் தே.பிரபாகரன் உள்ளிடட் நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பரிசுத் தொகையை திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியர் அலுவலகத்தில் செல்ல அனுமதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்த நிர்வாகிகள் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மனுவையும், விவசாயிகள் 6 பேருக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகையான ரூ.15 ஆயிரத்தையும் வழங்க முயன்றனர். ஆனால் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது மனுவை மட்டும் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அமைப்புச் செயலாளர் தே.பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் 40 ஆண்டுகால கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பல்லடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.