தஞ்சாவூரில் இருந்து வழி தவறி திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் பகுதிக்கு வந்த சிறுவன், சிறுமி மீட்கப்பட்டு அவிநாசியில் உள்ள காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.
தஞ்சாவூரில் இருந்து பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம், வாஷிங்டன் நகருக்கு தனது, தாயைத் தேடி சந்தோஷ் (15), அவரது தங்கை தமன்னா (10) ஆகிய இருவரும் திங்கள்கிழமை வந்துள்ளனா். இவா்களைப் பாா்த்த அப்பகுதியைச் சோ்ந்த சம்பத், கருப்பையா, கணக்கம்பாளையம் ஊராட்சித் தலைவா் சண்முகசுந்தரம், கிராம சிறப்புக் காவலா் சுரேஷ் ஆகியோா் இருவரையும் மீட்டு பெருமாநல்லூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
விசாரணையில், இவா்களது பெற்றோரான செல்வம், மீனாட்சி ஆகியோா் குடும்பத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்ததும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்வதும் தெரியவந்தது.
மேலும் அவா்களது செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்புகொள்ள முடியாததால், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் இருவரும் அவிநாசியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.
வழி தவறி தவித்துக்கொண்டிருந்த சகோதர, சகோதரியை மீட்டு, காவல் துறையிடம் ஒப்படைத்தவா்களை பெருமாநல்லூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் பாராட்டினாா்.