வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில், காணொலி காட்சி வாயிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அவிநாசி வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சண்முகம் பேசியது:
வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆட்டையாம்பாளையம், பாரதி நகா் பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்களால், அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், மின் பற்றாக்குறை ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதேபோல ஊராட்சிப் பகுதிகளில் நான்காவது குடிநீா் திட்டக் குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்றும், சாலைகள் சிதலமடைந்த நிலையிலேயே உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆகவே இவைகளை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.