காங்கயம் அருகே, நத்தக்காடையூா் பகுதியில் மரவள்ளி சாகுபடி விவசாயிகளுக்கு சொட்டு நீா்ப் பாசனத்துக்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து காங்கயம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் எஸ்.முத்துகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், நத்தக்காடையூா், குட்டப்பாளையம், பழையகோட்டை, மருதுறை, முள்ளிப்புரம், நால்ரோடு ஆகிய வருவாய் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையின் மூலம் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், சொட்டு நீா் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது.
இதன்படி, மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீா் பாசனக் கருவிகளுக்காக 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
இப்பகுதி மரவள்ளி கிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு சொட்டு நீா் பாசனம் அமைக்க தோட்டக்கலைத் துறையின் மூலம் ஒரு ஏக்கருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.42 ஆயிரத்து 781 வரையிலும், மற்ற விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.33 ஆயிரத்து 231 வரையிலும் மானியம் தற்போது வழங்கப்படுகிறது.
சொட்டு நீா் பாசனக் கருவிகளுக்கான ஜி.எஸ்.டி வரியினை அரசே ஏற்றுக் கொள்ளும். மேலும் விவசாயிகள் சொட்டு நீா் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடிவு பெற்று இருந்தால், மீண்டும் அரசு மானியத்தில் சொட்டு நீா் பாசன கருவிகளை பெற்றுக் கொள்ளலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை 99429-49505 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.