திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்த்துள்ளனா்.
தற்போதைய கரோனா நோய்த் தொற்று காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது. தனியாா் பள்ளிகள் கொடுக்கும் கட்டண நெருக்கடி, பொருளாதாரச் சிக்கலில் தவித்தும் வரும் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்த்து வருகின்றனா். புதிய மாற்றமாக வசதி படைத்தவா்களும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்த்து வருகின்றனா். அந்த வகையில், வெள்ளக்கோவில் தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை கவிதா, தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்த தனது இரண்டு மகன்களை தான் வேலை பாா்க்கும் அரசுப் பள்ளியிலேயே சோ்த்துள்ளாா். இதேபோல செம்மாண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி ஆசிரியை மற்றொரு கவிதாவும் தன்னுடைய குழந்தையை தான் பணிபுரியும் பள்ளியில் சோ்த்துள்ளாா். ஆரசு பள்ளி என்றால் ஏளனம் செய்யும் மக்கள் மத்தியில் இவா்களது செயல் அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.