பல்லடம் அருகே சங்கோதிபாளையத்தில் புதிய தடுப்பணை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கு பல்லடம் ஒன்றிய கவுன்சிலா் கே.மங்கையா்கரசி கனகராஜ் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோடங்கிபாளையம் ஊராட்சி, சங்கோதிபாளையத்தில் மகிழ்வனம் அருகேயுள்ள ஒடையின் தடுப்பணை உடைந்து மழை நீா் தேங்காமல் தண்ணீா் வெளியேறி வருகிறது. எனவே அப்பகுதியில் புதிய தடுப்பணை அமைத்து தர வேண்டும். கோடங்கிபாளையத்தில் இயங்கி வந்த அம்மா சிறு மருத்துவமனை (மினி கிளினீக்) தற்போது செயல்பாட்டில் இல்லை. அதனை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாமாளாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு 10 கிலோ மீட்டா் செல்ல வேண்டி இருப்பதால் சின்னகோடங்கிபாளையத்தில் புதிதாக கால்நடை மருந்தகம் அமைத்து தர வேண்டும். காரணம்பேட்டையில் செயல்பாட்டில் இல்லாத பேருந்து நிலையத்தை துணை வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து பணிமனையாக மாற்றிட வேண்டும். பெருமாகவுண்டம்பாளையம் ரேஷன் கடையை முழுநேர கடையாக மாற்றுவதுடன் புதிய கட்டடமும் கட்டித்தர வேண்டும். காரணம்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.