திருப்பூர்: திருப்பூர் மக்கள் சார்பில் உடுமலையைச் சேர்ந்த பள்ளி மாணவி உமா நந்தினிக்கு தேவார இசை அரசி பட்டம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி பி. உமா நந்தினி. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேவாரப் பாடல்களை இசைப்பண்ணுடன் பாடியுள்ளார். இவரைக் கெளரவிக்கும் வகையில் திருப்பூரில் உள்ள குன்றுதோர் ஆடல் கூட்டு வழிபாட்டுக்குழு, அருள் நெறி வாரவழிபாட்டுக்குழு ஆகியன சார்பில் உமா நந்தினிக்கு தேவார இசை அரசி பட்டம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர், ஷெரீப் காலனி குறிஞ்சி நகரில் உள்ள பாலு என்பவரது வீட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஆடிட்டர் லோகநாதன், திருப்பூர் கம்பன் கழகச் செயலாளர் கே.வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஆடிட்டர் தெய்வநாயகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து குன்றுதோர் ஆடல் வழிபாட்டுக்குழு, அருள்நெறி வார வழிபாட்டுக்குழு ஆகியன சார்பில் மாணவி உமா நந்தினிக்கு தேவார இசை அரசி பட்டம் வழங்கப்பட்டது.
முன்னதாக கோவை சதாசிவம் சார்பில் மாணவிக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.பாலசுப்பிரமணியன், ஆர்.கே.சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை ராம்நாத் நடராஜன் தொகுத்து வழங்கினார்.