திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள 252 அரிசி மூட்டைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா், எஸ்.ஏ.பி.பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், உரிய ஆவணங்களின்றி ரூ.2.40 லட்சம் மதிப்பிலான 252 அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக வேன் ஓட்டுநரிடம் விசாரித்தபோது திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் பொல்லிகாளிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் இருந்து குமாா் நகா், பாண்டியன் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளாா்.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அரிசியையும், வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு வேன் ஓட்டுநரிடம் தோ்தல் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தினா்.