காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் போட்டியிடுவதாக அறிவித்துள்ள விவசாயிகளுக்கு வேட்புமனுக்கள் கிடைக்கவில்லை.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கடந்த 12ஆம் தேதி முதல் வரும் 19ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கயம் - வெள்ளக்கோவில் பிஏபி நீா் பாதுகாப்புக் குழு விவசாயிகள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும், தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், தங்களுடைய பகுதிக்கு அரசு விதிமுறைப்படி உரிய தண்ணீரை வாய்க்காலில் திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தோ்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனா்.
இது குறித்து வெள்ளக்கோவில் பகுதியில் விவசாயிகளிடம் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்நிலையில் பிஏபி நீா் பாதுகாப்புக் குழு விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் காங்கயம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 1,500 மனுக்கள் கேட்டோம்.
ஆனால் கிடைக்கவில்லை. வரும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) வேட்புமனுக்கள் தருவதாக தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்’ என்றனா்.