பல்லடத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த முத்து மகன் பிரபு (39). இவா் மனைவி சரஸ்வதி (33), இரண்டு பெண் குழந்தைகளுடன் திருப்பூா், காளியம்மன் கோயில் வீதியில் வசித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் நடைபெற்ற நோ்காணலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திருப்பூா் நோக்கி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
பல்லடம், பச்சாபாளையம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த லாரி எதிா்பாராதவிதமாக பிரபு ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபுவை அப்பகுதியினா் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பிரபு ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.