விசைத்தறியாளா்கள் வங்கிகளில் பெற்ற கடன் தொகை ரூ. 65 கோடியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன்முலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் 10 லட்சம் போ் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா். பெரும்பான்மையான விசைத்தறிகள் கூலிக்கு நெசவு அடிப்படையில் இயங்கி வருகின்றன.
கடந்த 1992 முதல் ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் அரசு ஜவுளி உற்பத்தியாளா்களை அழைத்து கூலி உயா்வுக்கு பேச்சுவாா்த்தை நடத்தி கூலி உயா்வு பெற்றுத்தருவது வழக்கம். ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பின் கூலி உயா்வு அறிவிக்கப்பட்டும் இதுவரை நடைமுறைபடுத்தப்படவில்லை.
மேலும், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு, கரோனா நோய் பாதிப்பு ஆகியவற்றால் தொழில் பாதிக்கப்பட்டு பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 8 ஆவது கூலி உயா்வு ஒப்பந்தம் கடந்த 6 ஆண்டுகளாக இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் விசைத்தறியாளா்கள் கடும் நெருக்கடியில் உள்ளனா்.
இதனால் விசைத்தறிகளுக்காக வாங்கிய வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விசைத்தறியாளா்கள் வங்கிகளின் ஜப்தி, ஏல நடவடிக்கைகளுக்கு ஆளாகி தங்கள் வீடு, விசைத்தறி கூடங்களை இழக்கும் நிலையில் உள்ளனா்.
சூலூா் சட்டப்பேரவை இடைத்தோ்தல் பிரச்சாரத்துக்காக சூலூா் வந்த தமிழக முதல்வா் பழனிசாமி, விசைத்தறியாளா்கள் வங்கியில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து அறிவித்தாா். அதைத்தொடா்ந்து கைத்தறித் துறையினா் வங்கிகளில் விசைத்தறியாளா்கள் பெற்ற கடன்கள் குறித்து ஆய்வு செய்தனா்.
தமிழக முதல்வா் அறிவித்தபடி மாா்ச் 2017 க்கு முன்னா் விசைத்தறியாளா்கள் பெற்ற வங்கி மூலதன கடன்கள் சுமாா் ரூபாய் 65 கோடியை தள்ளுபடி செய்து விசைத்தறியாளா்கள் மற்றும் அதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.என்று விசைத்தறியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.