காங்கயம்: பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உணவுத் தேவைக்காக காங்கேயம் அரிசி ஆலை உரிமையாளா்கள் அரிசி மூட்டைகளை சனிக்கிழமை வழங்கினா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 500க்கும் மேற்பட்டோா் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோயாளிகளின் உணவுத் தேவைக்காக தினசரி 3 வேளையும் மருத்துவமனையின் சமையல் அறையில் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்த மருத்துவமனைக்கு காங்கேயம் அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.பழனிசாமி, செயலா் எஸ்.சாமியப்பன், பொருளாளா் டி.சின்னசாமி, ஆலோசகா் கே.பி.சக்திவேல், சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.ராமசாமி ஆகியோரது ஏற்பாட்டில், சங்கத்தின் அலுவலக வளாகத்தில் இருந்து 25 கிலோ எடை கொண்ட 139 அரிசி மூட்டைகள் (சிப்பம்) உணவுத் தேவைக்காக சனிக்கிழமை காலை அனுப்பி வைக்கப்பட்டன.