திருப்பூா்: திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே மது அருந்தியதைக் கண்டித்ததால் தந்தை, மகன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியை அடுத்த காளிபாளையம் பெரியதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி(80), இவரது மகன் காளியப்பன் (51), இவரது மனைவி சகுந்தலா(45). இந்தத் தம்பதிக்கு கவுதம் (23), தீபக் (21) என்ற இரு மகன்கள் உள்ளனா்.
முத்துசாமியும், காளியப்பனும் அதே பகுதியில் சிறியதாக பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தனா். கடந்த வியாழக்கிழமை இரவு இருவரும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனா். இதை காளியப்பனின் மனைவி சகுந்தலா கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த இருவரும் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் சல்பேட் மாத்திரையைச் சாப்பிட்டுள்ளனா். இதில், முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காளியப்பனை குடும்பத்தினா் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு காளியப்பனும் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.