காங்கயம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மரணமடைந்ததை அடுத்து, திங்கள்கிழமை மிகவும் குறைவான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியம் ஆண் ஊழியர்கள் 4 பேருக்கு கடந்த வியாழக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இதைத் தொடர்ந்து காங்கயம் வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டு, திங்கள்கிழமை முதல் அலுவலகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட நால்வரில் ஒரு ஊழியர் (வயது 55) தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் மரணமடைந்தார். இந்த நிலையில், காங்கயம் வட்டாட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. வட்டாட்சியர் மற்றும் ஒருசில ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர்.
50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்க வேண்டும் என்ற நிலையில், அதற்கும் குறைவாக ஒருசில ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால், திங்கள்கிழமை காங்கயம் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.