வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சூரியன் வெளியே தெரியாமல் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அடைமழை இருப்பதால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படவில்லை.
தீபாவளி பண்டிகை முடிந்து திங்கள்கிழமை முதல் தொழில்கள் சகஜ நிலைக்குத் திரும்ப இருந்த நிலையில் பணியாளர்கள் சரியாக வேலைக்கு வரவில்லை. தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த தொழிலாளர்கள் இன்னும் வேலை செய்யும் இடங்களுக்குத் திரும்பவில்லை.
இதனால் கட்டுமானப் பணிகள், நூற்பாலை இயக்கம் இன்னும் தொடங்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் இல்லாமல் கடைவீதி வெறிச்சோடிக் காணப்பட்டன.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்படாததால் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.