காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிறைபடி நெல் வைத்து செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். பின்னா், அந்தப் பொருளைக் கோயில் மூலவா் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் வைப்பாா்கள்.
இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.
இப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிா்ணயம் கிடையாது. இன்னொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.
கடைசியாக கடந்த செப்டம்பா் 2ஆம் தேதி வில்-அம்பு வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்தப் பொருள் திங்கள்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொங்கூா் பகுதியைச் சோ்ந்த கே.எம்.சிவராம் என்ற பக்தரின் கனவில் வந்ததாக, நிறைபடி நெல் வைத்து செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதுவரை 7 பொருள்கள்:
இதே பக்தரின் கனவில் வந்ததாக இதற்கு முன்பு பசும்பால், உப்பு, அச்சு வெல்லம், பூமாலை, இரும்புச் சங்கிலி, மக்காச்சோளம் ஆகியன வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிறைபடி நெல் இந்த பக்தரின் 7ஆவது பூஜைப் பொருள் ஆகும்.