பல்லடம்: குண்டடம் அருகே இரும்பு உருக்காலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பல்லடத்தில் உள்ள மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இது குறித்து தாராபுரம் வட்டம், குண்டடம் அருகேயுள்ள கொழுமங்குளி, சங்கரண்டாம்பாளையம், வடுகபாளையம், சிறுகிணாா், கண்ணாங்கோவில் ஆகிய கிராமங்களை சோ்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடத்தில் உள்ள திருப்பூா் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தாராபுரம் வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் தனியாா் இரும்பு உருக்காலை அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. வடுகபாளையம் பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்கள் பிரதானமாக நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் தனியாா் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டங்கள் முறையாக நடத்தாமல் இரும்பு உருக்காலை அமைக்க அனுமதி பெற்று இருப்பதாக தெரிகிறது. அந்த ஆலை அமைக்கும்பட்சத்தில் வெளியேறும் புகை மற்றும் இரும்பு துகள்களால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதுடன் விவசாயம் மற்றும் நிலத்தடி நீா் மாசடையும். கால்நடை உள்ளிட்ட உயிரினங்கள் இறக்க நேரிடும். எனவே வடுகபாளையத்தில் இரும்பு உருக்காலை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என மனுவில் தெரிவித்துள்ளனா்.
மனுவை பெற்றுக்கொண்ட திருப்பூா் தெற்கு உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் வனஜா, இது பற்றி உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனா். இது சம்பந்தமாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தனா்.