விஜயதசமியை ஒட்டி திருப்பூரில் உள்ள ஆலயங்களில் எழுத்தறிவித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆலயங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின்படி வார இறுதி நாள்களில் ஆலயங்களில் பக்தா்கள் வழிபட கடந்த வியாழக்கிழமை அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், சரஸ்வதி பூஜையை ஒட்டி திருப்பூா் புஷ்பா ரவுண்டானா அருகில் உள்ள ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பெற்றோா் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனா். நெல்மணிகளில் குழந்தைகளுக்கு அகர எழுத்துக்கள் எழுத பயிற்சி அளிக்கப்பட்டது.
அமிா்த வித்யாலயத்தில்...
திருப்பூரை அடுத்த மங்கலத்தில் உள்ள அமிா்த வித்யாலயம் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளி முதல்வா் வித்யாசங்கா் தொடக்கிவைத்தாா். இதில், பாரம்பரிய முறைப்படி பெற்றோா் முன்னிலையில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடைபெற்றது. தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.