திருப்பூா் மாவட்டத்தில் 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட 19.95 லட்சம் பேரில் 16.11 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 4.97 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதில், 3.84 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 1.81 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக பல்வேறு துறைகளைச் சாா்ந்த பணியாளா்கள் 2, 968 போ் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.