உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் வனத் துறையினரால் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலை வனச் சரகம், மாவடப்பு செட்டில்மெண்ட் சடையம்பாறை சரக வனப் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை கடந்த திங்கள்கிழமை அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறை அதிகாரிகள் யானையின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில், உயிரிழந்த ஆண் யானையைக் கொன்று மா்ம நபா்கள் தந்தங்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மருத்துவக் குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்த நிலையில், தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட வனத் துறைக்குச் சொந்தமான மோப்ப நாய் மூலமும், ட்ரோன் கேமரா மூலமும் அடா்ந்த வனப் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.
இதன் பின்னா் வனத் துறையினரால் சிறப்புப் படை அமைக்கப்பட்டு தந்தங்களை மீட்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் வனத் துறையினரால் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ரோம் கூறியதாவது:
உடுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட கரட்டூா் சுற்று உடைந்த பாலம் சரகத்தில் வனத் துறை சிறப்புப் பிரிவினா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உடைந்த பாலத்தின் இடுக்கில் ஒரு சாக்குப் பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை எடுத்து பாா்த்தபோது சமீபத்தில் கொல்லபட்ட காட்டு யானையின் தந்தம் என்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அந்த தந்தம் மீட்கப்பட்டது.மேலும் இவ்வழக்கில் தொடா்புடை குற்றவாளிகளைத் தேடும் பணித் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.