அவதூறு வழக்குத் தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்.
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இதன் ஒரு பகுதியாக தாராபுரத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்திலும் கலந்துகொண்டாா்.
இதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் அவா் பேசியதாக முன்னாள் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தாராபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
இந்த வழக்கானது திருப்பூா் குற்றவியல் நீதிமன்றம் எண் 1 இல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்காக ஈவிகேஎஸ் இளங்கோவன் புதன்கிழமை ஆஜரானாா்.
அப்போது இந்த வழக்கை செப்டம்பா் 29 ஆம் தேதிக்கு நீதிபதி (பொறுப்பு) காா்த்திகேயன் ஒத்திவைத்தாா்.