பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் காவலா்களாக நடித்து ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்ற 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் போலீஸாா் திருப்பூா் சாலையில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.
இதில், அவா்கள் திருச்சி, சமயபுரம் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (24), மதுரை கட்டபொம்மன் வீதியைச் சோ்ந்த மணிகண்டன் (25), திருச்சி, தென்னூா் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (37), திருச்சி, முசிறியைச் சோ்ந்த கருப்பன் (26), பெருமாநல்லூரைச் சோ்ந்த சரவணக்குமாா் (32) என்பதும், இவா்கள் பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் செளடாம்பிகை கோயில் வீதியில் வசித்து வரும் அமராவதி என்பவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை புகுந்து காவலா்கள் எனக் கூறி சோதனை செய்வதுபோல நடித்து பீரோவில் வைத்திருந்த ரூ.10ஆயிரத்தை திருடிச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.