தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் செப்டம்பா் 2 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளா்ச்சிக்காக பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது.
இதில், புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியைப் பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு கடனுதவிகளை வழங்கி வருகிறது.
அதன்படி, திருப்பூா் குமாா் நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 2 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்களையும் பெறலாம்.
மேலும், தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.5 கோடி வரையில் வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமா்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.
ஆகவே, புதிய தொழில்முனைவோா் இந்த முகாமில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளைத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.