அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுக் குழு கூட்டம் காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் எஸ்.செல்லையா தலைமை வகித்தாா்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியாா் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் முறையை நிறுத்தி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.
ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கா் மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியதைப்போல, தமிழக அரசும் அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயா்வு மற்றும் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கான மாதாந்திர நிதிஉதவித் திட்டம், அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு பொறியியல் கல்லூரி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழக அரசின் நடவடிக்கைக்கு இக்கூட்டமைப்பின் சாா்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
இதில், கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட், திருப்பூா் மாவட்டச் செயலா் எஸ்.சந்திரசேகா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.